காரைக்குடி அருகே திங்கள்கிழமை ஆம்னிவேன் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் சகோதரர்கள் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 8 பேர் பலத்த காயமடைந்தனர்.
தேவகோட்டை அருகே சிறுவாச்சி திருவாதூரைச்சேர்ந்தவர் தியாகராஜன் (31). இவரது மனைவி ரேவதி, மகன்கள் தீபக்ராஜ் (9), திலீப்ராஜ் (4), தீபன்ராஜ் (3) மற்றும் தியாகராஜனின் சகோதரர்கள் காமேஷ் (25), பிர காஷ் (23), உறவினர்கள் அழகர், சரண்யா ஆகிய 9 பேரும் பெங்களுரில் உள்ள உறவினர் இல்ல துக்கநிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு ஆம்னிவேனில் திங்கள்கிழமை ஊருக்கு திரும்பிவந்துகொண்டிருந்தனர்.
காரைக்குடி அருகே திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னிவேன் அதிகாலையில் வந்து கொண்டிருந்து. ஆவுடைப்பொய்கை பகுதியில் வந்தபோது, பாம்பன் பகுதியில் உள்ள கிரஷர் நிறுவனத்தின் மேலாளர் ஜெயபாலன் வந்த காரும் ஆம்னிவேனும் மோதிக் கொண்டன. காரை பாம்பன் பகுதியைச்சேர்ந்த பெரியசாமி என்பவர் ஓட்டினார். மோதிய வேகத்தில் ஆம்னிவேன் சாலையோரப் பள்ளத்தில் விழுந்து உருண்டது. இதில் வேனல் வந்த காமேஷ்(25) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரகாஷ்(23) உயிரிழந்தார். வேனில் பயணித்த 7 பேரும் காரில் வந்த ஜெயபாலனும் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் குறித்து குன்றக்குடி காவல்நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து கார் ஓட்டுநர் பெரியசாமியை கைது செய்தனர்.