காரைக்குடி நகராட்சி ஏஐடியூசி பொது சுகாதாரத் தொழிலாளர் சங்கக் கூட்டம் திங்கள் கிழமை நடைபெற்றது.
சங்கத் தலைவர் டி. முருகன் தலைமை வகித்தார். மாநில துணைப் பொதுச்செயலர் பிஎல். ராமச்சந்திரன், மாநிலக்குழு உறுப்பினர் ஆர். கண்ணன், செயலர் எம். ராமராஜ் உள்ளிட்ட பலர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
மூத்த கம்யூனிஸ்ட் தலைவரும், தொழிற்சங்கவாதியுமான டி. ஞானையா மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. ச ம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்தக்கோரி ஏஐடியூசி சார்பில் வரும் ஜூலை 28 -ஆம் தேதி சென்னையில் நடைபெறும் பேரணியில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொள்வது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஜூலை 25-இல் நடைபெறவிருக்கும் மாநிலந் தழுவிய மறியல் போராட்டத்தில் திரளானோர் பங்கேற்பது என்றும், ஆகஸ்ட் 10-ஆம் தேதி காரைக்குடி நகராட்சி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.