சிவகங்கை அருகே பெருமாள்பட்டியில் கோயில் காளை செவ்வாய்க்கிழமை இறந்தது. அதற்கு கிராமப் பொது மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தி வழிபட்டனர்.
சிவகங்கை மாவட்டம் பெருமாள்பட்டியில் கோயிலுக்குச் சொந்தமான காளை இருந்தது. மக்களிடையே நன்கு பழகும் தன்மையுடைய இந்த காளை கடந்த சில நாள்களாக உடல்நிலை மிகவும் மோசமான சூழ்நிலையில் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலையில் இறந்தது. இதையடுத்து, அக்கிராமப் பொதுமக்கள் இறந்த காளைக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் விதமாக மாலை அணிவித்து பூஜை செய்து வழிபட்டனர். பின்னர் டிராக்டரில் ஊர்வலமாக எடுத்துச் சென்று திருப்பத்தூர் சாலையில் உள்ள அய்யனார் கோயில் முன்பு அடக்கம் செய்தனர்.