தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க தேவகோட்டை கிளையின் கலை இலக்கிய இரவு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கவிஞர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். ராசேந்திரன், புரட்சித்தம்பி, வைரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கிளைச் செயலாளர் ஆசிரியர் அன்பரசன் வரவேற்றார். மாவட்டத் தலைவர் எழுத்தாளர் ஜீவசிந்தன் கலை இலக்கிய இரவு நடத்தப்படுவதன் காரணம் குறித்து சிறப்புரை யாற்றினார். இந்த ஆண்டும் அக்டோபர் 7 அன்று நடத்த முடிவு செய்யப்பட்டது. அதற்கான வரவேற்புக்குழுவின் தலைவராக போஸ், செயலராக அன்பரசன், பொருளாளராக ஜான்பீட்டர் ஆகியோர் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கலை இலக்கிய இரவில் முழுக்க முழுக்க பெண்களால் நிகழ்த்தப்படும் தப்பாட்டம், நாட்டு நடப்புகளை நையாண்டியாய் சொல்லும் நையாண்டி தர்பார், கிராமியப்பாடல், கவிதை, நாடகம், நாட்டியம், உரை வீச்சு, கிராமியக்கலை நிகழ்ச்சிகள் என நம் மண்ணின் பாரம்பரியக் கலை நிகழ்ச்சிகளை விழிப்பணர்வுச் சிந்தனைகளோடு வழங்குவது என முடிவு செய்யப் பட்டது.
கூட்டத்தில் தேவகோட்டை நகரில் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளை ஏற்படுத்தக்கூடிய நிலையில் சேதமடைந்துள்ள பகுதிகளைச் செப்பனிட உரிய அதிகாரிகளைக் கேட்டுக் கொள்வது, தமிழகம் எங்கும் தலைவிரித்தாடும் குடிநீர்ப் பிரச்னைக்குத் தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசை வலியுறுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயற்குழு உறுப்பினர் ஆசிரியை ஜோதி சுந்தரேசன் நன்றி கூறினார்.