சிவகங்கை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தொடங்கப்பட உள்ள அம்மா இரு சக்கர வாகனம் பழுது பார்த்தல் மற்றும் பராமரித்தல் மையத்தில் பயிற்சி பெற,சிவகங்கை ஒன்றியத்தைச் சேர்ந்த இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என, அரசு தொழிற் பயிற்சி நிலையத்தின் முதல்வர் எம். சீராளன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகங்கை அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் அம்மா இரு சக்கர வாகனம் பழுது பார்த்தல் மற்றும் பராமரித்தல் மையம் விரைவில் தொடங்கப்படவுள்ளது. இந்த பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற விரும்பும் விணணப்பதாரர்கள், பள்ளிக் கல்வியில் ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவராக இருத்தல் வேண்டும். 18 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும். பயிற்சி காலம் 3 மாதங்கள் (300 மணி நேரம்) நடைபெறும். பயிற்சியாளர்களுக்கு உதவித் தொகை நாள் ஒன்றுக்கு ரூ. 100 வழங்கப்படும். சிவகங்கை ஒன்றியத்துக்கு உள்பட்டவராக இருத்தல் வேண்டும்.
மேற்கண்ட தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் பயிற்சியில் சேர உரிய சான்றிதழ்களுடன், சிவகங்கை அருகே முத்துப்பட்டியில் உள்ள அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.