சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே தென்கரை கிராமத்தில் இயங்கி வரும் அரசு மதுபானக் கடையை மூடக் கோரி ஞாயிற்றுக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தென்கரைப் பகுதியில் நெடுஞ்சாலையோரம் இருந்த மதுபானக் கடை நீதிமன்ற உத்தரவுப்படி மூடப்பட்டது. பின்னர், அதே பகுதியில் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து 500 மீட்டர் தொலைவில் வயல்வெளிக்குள் மதுபானக் கடை திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதை மூடக் கோரி, மகளிர் மன்றங்கள், இளைஞர் மன்றம், கிராமத்தினர், மாணவ, மாணவியர், சமூகநல ஆர்வலர்கள் உள்ளிட்ட பல தரப்பினர் சிராவயல் ஊராட்சி மன்றம் அருகே கூடி ஆலோசனை நடத்தினர். அப்போது, விவசாய நிலத்தை பாழ்படுத்தும் மதுபானக் கடையை உடனே அகற்றக் கோரி, மாவட்ட நிர்வாகத்துக்கு மனு அனுப்புவது என முடிவெடுத்தனர்.
இது தொடர்பாக அரசு எடுக்கும் நடவடிக்கையை பொருத்தே அடுத்தக் கட்ட போராட்டங்கள் தொடரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இது தொடர்பாக ஒருங்கிணைப்புக் குழு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.