வாகனம் மோதி முதியவர் சாவு
மதுரை அருகே ஞாயிற்றுக்கிழமை வாகனம் மோதி மருந்து வாங்க வந்தவர் உயிரிழந்தார்.
சிவகங்கை மாவட்டம் பசியாபுரத்தைச் சேர்ந்தவர் பரமசிவம்(62). முழங்கால் வலியால் அவதிப்பட்டு வந்த பரமசிவம் நாட்டு மருந்து வாங்குவதற்காக சிலைமானுக்கு வந்துள்ளார். அங்கு பேருந்து நிறுத்தத்துக்கு சென்றபோது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பரமசிவம் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சைப்பெற்று வந்தநிலையில் சிகிச்சைப் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
இதுகுறித்து அவரது மனைவி கஸ்தூரி (58) அளித்தப் புகாரின் பேரில் சிலைமான் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
சாலை விபத்தில் பெண் சாவு: மதுரை செல்லூர் அகிம்சாபுரத்தைச் சேர்ந்த வெங்கடசாமி மனைவி சரஸ்வதி (69). இவர் குலமங்கலத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சனிக்கிழமை சென்றுள்ளார். அங்கு சாலையை கடக்க முயன்றபோது அவ்வழியாகச் சென்ற மோட்டார் சைக்கிள் சரஸ்வதி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி சரஸ்வதி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து உறவினர் பாண்டி அளித்தப் புகாரின் பேரில் தல்லாகுளம் போக்குவரத்துப் புலனாய்வுப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.