சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே வியாழக்கிழமை இரு சக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதியதில், இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
சிங்கம்புணரி அருகே கொடுங்குன்றம்பட்டியைச் சேர்ந்தவர் அழகுச்சாமி (27). இவர், சிங்கப்பூரில் வேலை செய்து வந்தார். விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்த இவர், வியாழக்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் காரைக்குடியிலிருந்து சிங்கம்புணரிக்கு வந்து கொண்டிருந்துள்ளார். அப்போது, சிலநீர்பட்டி விலக்கு அருகே எதிரே வந்த அரசுப் பேருந்து மோதியதில், பலத்த காயமடைந்த அழகுச்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து, எஸ்.வி.மங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.