வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் வேலை வழங்கக் கோரி, சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பேரூராட்சி அலுவலகத்தை வெள்ளிக்கிழமை பொதுமக்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
இளையான்குடி பேரூராட்சி பகுதியைச் சேர்ந்த கீழாயூர், கீழாயூர் காலனி, சோதுகுடி, பகைவென்றான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் வேலை வழங்கக் கோரி, பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். மேலும், தங்கள் பகுதிக்கு பேரூராட்சி நிர்வாகம் குடிநீர் வசதி செய்துதர வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
இதையடுத்து, பேரூராட்சி அதிகாரிகள், போலீஸார் போராட்டம் நடத்திய மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உறுதியளித்தனர். அதையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு, கோரிக்கை அடங்கிய மனுவை அதிகாரிகளிடம் அளித்தனர்.