சிங்கம்புணரி கோயிலில் வைகாசி திருவிழா: விநாயகர் சந்திவீரன் கூடம் எழுந்தருளல்
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி ஸ்ரீ சேவுகப் பெருமாள் அய்யனார் கோயிலில் வைகாசி திருவிழாவையொட்டி, விநாயகர் சந்திவீரன் கூடத்தில் எழுந்தருளும் விழா வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
சிவகங்கை சமஸ்தானத்துக்குள்பட்ட இக்கோயிலில் வைகாசித் திருவிழா மே 28 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 10 நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவுக்கு முன்னதாக, கோயிலில் இருந்து விநாயகர் வெள்ளி வாகனத்தில் சந்திவீரன் கூடம் எழுந்தருளும் நிகழ்ச்சி வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. இதை முன்னிட்டு, வியாழக்கிழமை அதிகாலையே சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
இரவில், சப்பரத்தில் எழுந்தருளிய விநாயகர் கீழக்காட்டு சாலை வழியாக சந்திவீரன் கூடம் அடைந்தார். செல்லும் வழியில் ஏராளமான பக்தர்கள் விநாயகருக்கு பூஜைகள் செய்து காணிக்கையும் அளித்தனர். சந்திவீரன் கூடத்தில் 10 நாள்கள் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் விநாயகர், 11 ஆம் நாளான மே 28 ஆம் தேதி காலை கோயிலுக்கு எழுந்தருளும்போது கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது.
திருவிழாவின் 5 ஆம் நாள் நிகழ்ச்சியாக திருக்கல்யாணமும், 6 ஆம் நாள் கழுவன் திருவிழாவும், 9 ஆம் நாள் திருத்தேரோட்டமும், 10 ஆம் நாள் பூப்பல்லக்கும் நடைபெறுகிறது.
திருவிழாவுக்கான ஏற்பாடுகளை, சிவகங்கை தேவஸ்தானம் மற்றும் கிராம பொதுமக்கள் இணைந்து செய்து வருகின்றனர்.