பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் அரசு மதுபானக் கடைகளை அகற்ற வேண்டும் என்று, காரைக்குடியில் திராவிடர் கழக மகளிரணியினர் வலியுறுத்தியுள்ளனர்.
திராவிடர் கழக மகளிரணியின் மகளிர் பாசறை சார்பில், காரைக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம் மண்டலங்களின் கலந்துரையாடல் கூட்டம், வியாழக்கிழமை மாலை காரைக்குடி வீ.கே.என். மாளிகையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் தி. ஜெயலெட்சுமி தலைமை வகித்தார்.
சிவகங்கை மகளிரணி நிர்வாகி மணிமேகலை முன்னிலை வகித்தார். ராமநாதபுரம் மகளிரணி நிர்வாகி அ. நாகவள்ளி வரவேற்றார். மாநில மகளிரணிச் செயலர் செந்தமிழ்செல்வி சிறப்புரையாற்றினார்.
தி.க. நிர்வாகிகள் தேவகோட்டை மு.சு. கண்மணி, ச. இன்பலாதன், தி.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் சாமி. திராவிடமணி, மாவட்ட தி.க. தலைவர் ச. அரங்கசாமி ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள், பெண்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் மதுபானக் கடைகளை உடனே அகற்றவேண்டும். இல்லையெனில், பெண்களை திரட்டி கடைகளை உடைக்கும் போராட்டம் நடத்தப்படும். நியாய விலைக் கடைகளில் சலுகை விலை உணவுப் பொருள்களை சீராக வழங்கவேண்டும். பெண்களை பாலியல் வன்கொடுமை, வழிப்பறி உள்ளிட்டவற்றிலிருந்து பாதுகாக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், மே 27 ஆம் தேதி திருச்சியில் நடைபெறவிருக்கும் மாநில மகளிரணி-மகளிர் பாசறை மாநாட்டில் ஏராளமான பெண்கள் கலந்துகொள்வது எனவும், காரைக்குடியில் செப்டம்பர் 17 இல் பொது மருத்துவ முகாம் நடத்துவது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில், நகர தி.க. மகளிரணிச் செயலர் கோ. முத்துலெட்சுமி நன்றி கூறினார்.