திருப்புவனம் அருகே வியாழக்கிழமை மணல் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது.
மதுரை-ராமநாதபுரம் இடையே நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக, திருப்புவனம் பகுதியில் புறவழிச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப் பணிக்காக, சவடு மண் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று திருப்புவனம் அருகே லாடனேந்தல் கிராமத்துக்குச் சென்று கொண்டிருந்தது. வில்லியரேந்தல் விலக்குப் பகுதியில் சென்றுகொண்டிருந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. அப்போது டீசல் டேங்க் வெடித்ததால், லாரி தீப்பிடித்து எரிந்தது.
இந்த விபத்தில் சிக்கிய லாரி ஓட்டுநர் முத்துப்பாண்டியை அருகிலிருந்தவர்கள் காப்பாற்றினர். அதையடுத்து, மதுரையிலிருந்து தீயணைப்புப் படையினர் வந்து லாரியில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இருப்பினும், லாரி முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.