சிவகங்கை மாவட்டம், கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட வெங்களூர் கிராமத்தில், கூடுதல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் ஜி. பாஸ்கரன் சனிக்கிழமை தொடக்கி வைத்தார்.
இந்த விழாவுக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் து. இளங்கோ தலைமை வகித்தார். துணை இயக்குநர் (சுகாதாரம்) யசோதாமணி, சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினர் செந்தில்நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், அமைச்சர் ஜி. பாஸ்கரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு கூடுதல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்துப் பேசியதாவது.
இப்பகுதியில் கூடுதல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில், வெங்களூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 80 கிராமப் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், இந்த சுகாதார நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், சாதாரண மக்களும் உயர்தர மருத்துவச் சிகிச்சை பெற முடியும் என்றார்.
இந்நிகழ்ச்சியில், வட்டார மருத்துவ அலுவலர் ராஜாராம், வட்டார சுகாதார மையத்தின் மேற்பார்வையாளர் சிவக்குமார், அரசுத் துறை அலுவலர்கள், மருத்துவப் பணியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.