திருப்பத்தூர் அருகே சிவசக்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே ஊர்குளத்தான்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சிவசக்தி விநாயகர் கோயிலில் வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இக் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, கடந்த செவ்வாய்க்கிழமை (நவ. 7) அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, மஹா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், அதைத் தொடர்ந்து முதற்கால யாகசாலை பூஜை மற்றும் மகா பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றன. புதன்கிழமை காலை மங்கல இசை, வேதபாராயணம், புண்யாகுவாசனம், பஞ்சகவ்ய பூஜை, தொடர்ந்து இரண்டாம் கால யாகசாலை பூஜை, விசேஷ சாந்தி ஆகியன நடைபெற்றன. அன்றிரவு சதுர்வேத பாராயணம், வேதிகா பூஜை, திரவியா குதி மற்றும் மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன. கும்பாபிஷேக நாளான வியாழக்கிழமை காலை வேத பாராயணம், பாலிகா பூஜை, கோ பூஜை, கன்யாபூஜை உள்ளிட்ட பூஜைகளைத் தொடர்ந்து நான்காம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. அதையடுத்து, காலை 9.30 மணியளவில் யாகசாலையிலிருந்து கடம் புறப்பாடு நடைபெற்று. காலை 10 மணிக்கு ஸ்ரீ சிவசக்தி விநாயகர், பாலமுருகன், தட்சிணாமூர்த்தி, மகாலெட்சுமி, துர்க்கை, ஆஞ்சநேயர் மற்றும் நவக் கிரஹங்களுக்கும் விமான கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து, காலை 10.30 மணியளவில் பட்டுச் சாத்துதல், சிறப்பு தீபாராதனை ஆகியன நடைபெற்றன. விழாவில், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் மற்றும் ஊர்குளத்தான்பட்டி, திருப்பத்தூர், நெடுமறம், கும்மங்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.