சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பேரூராட்சியைநகராட்சியாக தரம் உயர்த்துவதற்கான அறிவிப்பு சிவகங்கையில் நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர்அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மானாமதுரை தேர்வுநிலை பேரூராட்சி 18 வார்டுகள் கொண்டதாகும். நகர் பகுதியின் எல்கை நாளுக்குநாள் விரிவடைந்து வருகிறது.புதிதாக ஏராளமான குடியிருப்புகள் உருவாகி வருகின்றன. மாவட்டத்தில் மானாமதுரை பேரூராட்சி நிர்வாகத்துக்கு பலவகை வரி இனம் மூலம் வருமானம் கிடைத்து வருகிறது. பொதுநிதியிலிருந்து வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே தகுதி அடிப்படையில் தமிழகத்தில் நகராட்சியாக தரம் உயர்த்த தகுதியான பேரூராட்சிகள் கணக்கெடுக்கப்பட்டு அரசுக்கு அறிக்கை அளிக்கப்பட்டுவிட்டது.
எனவே எப்போது வேண்டுமானாலும் மானாமதுரை நகராட்சியாக அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் கசிந்து வந்தன. ஆனால் இதுவரை அறிவிப்பு வெளியாகவில்லை. மானாமதுரை நகராட்சியாக அறிவிக்கப்பட்டால் வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு கூடுதல் நிதி, கூடுதல் துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் கிடைக்கும்.
தமிழகத்தில் நகராட்சியாக அறிவிக்கப்படவுள்ள பேரூராட்சிகள் பட்டியலில் மானாமதுரை தேர்வுநிலை பேரூராட்சியும் உள்ளதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் 18 ஆம்தேதி சிவகங்கையில் அரசு சார்பில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது.
இவ் விழாவில் முதல்வர்எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும்அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். அப்போது சிவகங்கை மாவட்டத்துக்கான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிப்பேசும் முதல்வர் பழனிசாமி,மானாமதுரை நகராட்சியாகும் என்ற அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளதாக பேரூராட்சித்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.