சிவகங்கை மாவட்டத்தில் பயிர்க்காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணத் தொகை வழங்காததைக் கண்டித்து புதன்கிழமை விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சிவகங்கை மாவட்டம் புலியடிதம்மம்,மறவமங்கலம், பெரியகண்ணனூர் ஆகிய பகுதிகளிலும், மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் கடந்த ஆண்டு விவசாயிகள் பயிர்க்காப்பீடு செய்தனர்.
ஆனால் அவர்களுக்கு இன்னும் உரிய நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் புகார் தெரிவித்தும் நிவாரணத் தொகை எப்போது வழங்கப்படும் என்பதை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் புதன்கிழமை சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்டச் செயலருமான எஸ்.குணசேகரன் தலைமையில் ஏராளமான விவசாயிகள் இதில் பங்கேற்றனர். அவர்கள் அனைவரையும் சிவகங்கை நகர் போலீஸார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.