தேவகோட்டை வட்டார விவசாயிகள் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்து பயன்பெறுமாறு தேவகோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மா. விஜயன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டாரம் வறட்சிக்கு இலக்காகும் வட்டாரம் என்பதால் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம் பயனுள்ளதாக இருக்கும். விவசாயிகள் தங்களுக்கு ஏற்படும் பயிர் மகசூல் இழப்பினை சரி செய்து கொள்வதோடு விவசாயத்திலே தொடர்ந்து நீடிக்க செய்வது, வேளாண் தொழில்நுட்பங்களை கடைப்பிடிப்பது போன்றவையே இத்திட்டத்தின் நோக்கம். இதில் அனைத்து விவசாயிகளும் பங்கேற்கலாம்.
இத்திட்டத்தில் வருவாய் கிராமம் வாரியாக காப்பீடு வரையறை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் நெல் பயிருக்கு அனைத்து வருவாய் கிராம அளவிலும் செயல்படுத்தப்படும். இதில் கடன் பெற்ற மற்றும் கடன்பெறாத விவசாயிகளுக்கு பிரீமியம் செலுத்த ஒரே மாதிரியான காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ராபி பருவ நெல் பயிருக்கு 1.5 சதவீதம் பிரீமியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பயிர்க் கடன் பெறும் விவசாயிகளுக்கு கடன் வழங்கும் தொகையிலேயே பிரீமியத்தொகை பிடித்தம் செய்யப்பட்டு இத்திட்டத்தில் சேர்த்து கொள்ளப்படுவர்.
கடன்பெறாத விவசாயிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலோ தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலோ பிரீமியத்தொகை செலுத்த வேண்டும். விதைப்பு மேற்கொள்ள இயலாமை, அறுவடைக்குப்பின் இழப்புகள் மற்றும் இயற்கை சீற்றங்களால் பயிர் பாதிப்பு ஆகியவற்றுக்கு காப்பீடு நிறுவனத்தால் இழப்பீட்டு தொகை வழங்கப்படும்.
வங்கியில் சிட்டா , அடங்கல் , ஆதார் அட்டை நகல் மற்றும் சேமிப்பு கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகியவற்றை தாக்கல் செய்து பிரீமியத் தொகை ரூ.352 செலுத்த வேண்டும். 30.11.2017 -க்குள் அனைத்து விவசாயிகளும் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்து பயனடைய வேண்டும் என தெரிவித்துள்ளார்.