சிவகங்கை மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையின் முதல் கட்டமாக, பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் பணி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
சிவகங்கையில் உள்ள புனித ஜஸ்டின் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற தொடக்க விழாவுக்கு, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் க. லதா தலைமை வகித்து, அப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீரை வழங்கினார்.
அரசின் அறிவுறுத்தலின்படி, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகள், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீர் வியாழக்கிழமைதோறும் வழங்கப்பட உள்ளது. முன்னதாக, மாவட்ட ஆட்சியர் க. லதா முன்னிலையில் சுகாதாரத் துறை அலுவலர்கள், ஆசிரியர்கள், நகராட்சி அலுவலர்கள் மற்றும் பள்ளி மாணவிகள் உள்ளிட்ட அனைவரும் எனது வீட்டிலோ வீட்டின் சுற்றுப்புறத்திலோ டயர், தேங்காய் சிரட்டைகள், உடைந்த குடங்கள், உபயோகமற்ற பிளாஸ்டிக் கப்புகள் உள்ளிட்ட பொருள்களை போடமாட்டேன் என்றும், அவ்வாறு ஏதேனும் வீணான பொருள்கள் கிடந்தாலும் அவற்றை உடனே அகற்றிடுவேன் என்றும், எனது வீடடில் தண்ணீர் சேமித்து வைக்கும் குடங்கள், சிமென்ட் தொட்டிகள், டிரம்கள் ஆகியவற்றில் கொசு உருவாகாத வண்ணம் மூடி வைப்பேன் என்றும், இதன்மூலம் ஏடீஸ் கொசுப் புழு வளராமல் தடுப்பேன் எனக் கூறி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் சாந்திமலர், இணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) விஜயன் மதமடக்கி, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) யசோதாமணி, முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி, புனித ஜஸ்டின் மகளிர் மேல்நிலைப் பள்ளி முதல்வர் மரியாதெரசா மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.