சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மீது 7 ஆண்டுகள் நடைபெற்று வந்த தேர்தல் விதிமீறல் குறித்த வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டு, வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது.
கடந்த 2011-இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின்போது தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், பேருந்து நிலையம் அருகேயுள்ள காந்தி சிலையிலிருந்து சுமார் 100 வாகனங்களில் தொண்டர்களுடன் ஊர்வலமாகச் சென்று அண்ணா சிலைக்கு மாலையணிவித்ததாக, அப்போதைய கிராம நிர்வாக அலுவலர் சுப்பிரமணியன் காவல் துறையில் புகார் அளித்தார். அதன்பேரில், இவர் மீது தேர்தல் ஆணையம் தேர்தல் விதிமுறை மீறல் வழக்குப் பதிவு செய்தது. கடந்த 7 ஆண்டுகளாக திருப்பத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது. வியாழக்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணையில், குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி குற்றச்சாட்டுக்கு தகுந்த ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, கே.ஆர். பெரியகருப்பனை விடுதலை செய்தார். தீர்ப்பின் காரணமாக, நீதிமன்ற வளாகத்தில் ஏராளமான தி.மு.கவினர் கூடியிருந்தனர்.