தமிழக அரசு நலத்திட்டங்களில் ஒன்றான கறவைப் பசுகள்,வெள்ளாடுகள், செம்மறியாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பெண்கள் அந்தந்த ஊராட்சி தேர்வு குழுவில் விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையின் மண்டல இணை இயக்குநர் கருணாகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தி விவரம்:தமிழக அரசின் நலத்திட்டங்களில் ஒன்றான விலையில்லா கறவைப் பசுக்கள்,ஆடுகள்(வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள்) வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், சிவகங்கை மாவட்டத்தில் நடப்பு ஆண்டிற்கான(2017-2018) விலையில்லா கறவை பசுகள், ஆடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பெண்கள் நிலமற்றவராகவும், கறவைப் பசுக்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பெண்கள் ஒரு ஏக்கர் நிலம் உள்ளவராகவும் இருத்தல் வேண்டும்.
மேற்கண்ட தகுதியுடைய பெண்கள் விண்ணப்பத்துடன், தங்களது வங்கி கணக்கு புத்தகத்தின் நகல், ஆதார் அட்டையின் நகல்,இருப்பிடச் சான்றிதழ் (அசல் மற்றும் நகல்) ஆகியவற்றுடன் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 2 இணைத்து அந்தந்த பகுதி ஊராட்சியில் உள்ள கால்நடைத் துறையின் தேர்வு குழுவில் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.