சிவகங்கை அருகே சோழபுரத்தில் உள்ள ஸ்ரீ ரமண விகாஸ் மேல்நிலைப் பள்ளியில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மைப் பணிகள் புதன்கிழமை நடைபெற்றன.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற தூய்மை பணியினை, பள்ளியின் செயலர் கே. முத்துக்கண்ணன் தலைமை வகித்து தொடக்கி வைத்தார்.
இதில், பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு, பள்ளி வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டனர்.
மேலும், தற்போது அதிவேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சல் குறித்தும், அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. இதில், உதவி தலைமை ஆசிரியர் ஜெ. கணேஷ், பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.