சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சந்தாதாரர்களுக்கு, தமிழக அரசின் விலையில்லா செட்-டாப் பாக்ஸ் வழங்கப்பட்டு வருவதாக, மாவட்ட ஆட்சியர் க. லதா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு கேபிள் டிவி சந்தாதாரர்களுக்கு வழங்குவதற்காக 1,000 செட்-டாப் பாக்ஸ்கள் பெறப்பட்டுள்ளன. இவை, உள்ளுர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மூலம் சந்தாதாரர்களுக்கு வழங்கப்பட்டு, செயலாக்கம் செய்யப்பட்டு வருகின்றன.
உள்ளுர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள், சந்தாதாரர்களுக்கு செட்-டாப் பாக்ஸ்களை விலையில்லாமல் வழங்க வேண்டும். மேலும், விலையில்லா செட்-டாப் பாக்ஸ்களை சந்தாதாரர்களின் இடத்தில் நிறுவி, அதனை செயலாக்கம் செய்வதற்காக மட்டுமே ரூ. 200 ஒருமுறை மட்டுமே பெற்றுக் கொள்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. விலையில்லா செட்-டாப் பாக்ஸ் என்பதால் நிறுவுதல் மற்றும் செயலாக்கம் செய்வதற்காக நிர்ணயிக்கப்பட்ட ரூ.200-க்கு மேல் சந்தாதாரர்கள் கூடுதலாக தொகை ஏதும் செலுத்த வேண்டாம். இதற்கு மேல் கூடுதல் தொகை வசூலித்தால், சந்தாதாரர்கள் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 2911 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.