தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு தொழில் திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலம் வழங்கப்பட உள்ள திறன் மேம்பாட்டு பயிற்சியில் சேர விரும்பும் மாற்றுத் திறனாளிகள் வரும் செப்.22-க்குள் விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் க.லதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தி விவரம்:மாற்றுத்திறனாளிகள் பொதுத்துறை மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பினை பெறும் வகையில் தமிழ்நாடு தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி நிறுவனத்தில் பதிவு பெற்ற நிறுவனங்கள் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதில் 18 வயது முதல் உள்ள மாற்றுத்திறனாளிகள் மேனிலை வகுப்பு அல்லது அதற்கு மேல் படித்து கை, கால் இயக்க குறைபாடுடைய 40 மாற்றுத்திறனுடைய நபர்களுக்கும்,10 பார்வைதிறன் குறைபாடுடைய மாற்றுத்திறனுடைய நபர்களுக்கும் 200 மணிநேரம் ஆங்கில மொழி வழிக் கல்வி, கணினி பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. இப்பயிற்சியில் சேர விருப்பமுள்ள சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் தங்களது கல்விச் சான்றிதழ்கள்,புகைப்படம் ஆகியவற்றுடன் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் வரும் செப்.22-க்குள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.