கனடா நாட்டில் நடைபெற்ற உலகத் தடகளப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ள காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பாரா விளையாட்டுப் பயிற்சி மைய வீரருக்கு, பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
கனடா நாட்டின் டோரான்டோ நகரில் கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை, உயரம் குன்றியவர்களுக்கான 7-ஆவது உலகத் தடகளப் போட்டி நடைபெற்றது. இதில், காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழக பாரா விளையாட்டுப் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற வீரர் ஏ. செல்வராஜ் பங்கேற்று, ஈட்டிஎறிதல் பிரிவில் 26.54 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்றார்.
தங்கம் வென்ற செல்வராஜூக்கு அழகப்பா பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடத்தப்பட்டது. விழாவில், துணைவேந்தர் சொ. சுப்பையா தலைமை வகித்துப் பேசினார். மதுரை தென்னக ரயில்வே தலைமை முன்பதிவு அதிகாரியான ஆசியன் தங்கப் பதக்கம் வென்ற உ. பாண்டீஸ்வரி வாழ்த்திப் பேசினார்.
இதில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கே. மீனா சிறப்புரையாற்றினார். பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ, மாணவியர் பலரும் கலந்துகொண்டனர். முன்னதாக, பல்கலைக்கழக ஆராய்ச்சி முதன்மையர் த. ரா. குருமூர்த்தி வரவேற்றுப் பேசினார். முடிவில், அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் எம். சுந்தர் நன்றி கூறினார்.