சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வேதியரேந்தல் விலக்கு பகுதியில் அமைந்துள்ள மகா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி கோயிலில் சித்திரை மாதத்தின் அமாவாசை யாகம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இதையொட்டி கோயில் யாகசாலையில் புனிதநீர் கலசங்கள் வைத்து யாகம் வளர்க்கப்பட்டது. உலக மக்கள் அனைவரும் அன்புடன் ஆனந்தமாய் வாழ வேண்டி இந்த யாகம் நடத்தப்பட்டது. யாக குண்டத்தில் பட்டுப்புடவைகள், தங்கம், வெள்ளி, இனிப்பு வகைகள், மலர் மாலைகள், திரவியப் பொருள்கள் உள்ளிட்ட பல பொருள்கள் இடப்பட்டன. யாகத்தைக் காண கோயிலில் ஏராளமானோர் திரண்டிருந்தனர். யாகத்தின் நிறைவாக பூர்ணாஹூதியாகி மகா தீபாரதனை காட்டப்பட்டது. பின்னர் புனிதநீரால் பிரத்யங்கிரா தேவிக்கு பாத சமர்ப்பணம் செய்து சிறப்பு பூஜைகள், தீபாரதனைகள் நடைபெற்றன. பின்னர், கோயிலில் நடந்த அன்னதானத்தில் திரளானோர் பங்கேற்றனர். யாகத்துக்கான ஏற்பாடுகளை பிரத்யங்கிரா மடாலய நிர்வாகி ஞானசேகரன் சுவாமிகள் செய்திருந்தார்.