புலவர்சேரி கிராம சாலையை சீரமைக்க கோரிக்கை

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே உள்ள புலவர்சேரி கிராம சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே உள்ள புலவர்சேரி கிராம சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 திருப்பாச்சேத்தியிலிருந்து தஞ்சாக்கூர் வழியாக கட்டனூர் செல்லும் சாலையில் புலவர்சேரி கிராமத்திற்கு செல்லும் விலக்கு சாலை உள்ளது. சுமார் 2 கி.மீ. தொலைவுள்ள இந்த சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பழுதடைந்துள்ளது. இதனால் மிகவும் சிரமத்துக்குள்ளான அப்பகுதி மக்கள், இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் பலமுறை புகார் தெரிவித்தனர். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
 இதுகுறித்து புலவர்சேரி கிராமப் பொதுமக்கள் கூறியது:
 எங்கள் கிராமத்தில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் கிராம மக்களின் அத்தியாவசிய தேவைக்கு அருகில் உள்ள  திருப்பாச்சேத்தி, கட்டிக்குளம், தஞ்சாக்கூர் ஆகிய பகுதிக்கு தான் செல்ல வேண்டும். சுமார் 2 கி.மீ. தொலைவு நடந்து திருப்பாச்சேத்தி- கட்டனூர் சாலையில் உள்ள விலக்குப் பகுதிக்குச் சென்று அங்கிருந்து பேருந்தில் செல்ல வேண்டும்.
  இந்நிலையில், இச்சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், அப்பகுதி  பொதுமக்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
 எனவே, மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும், சாலையின் இருபுறமும் உள்ள சீமைக்கருவேல மரங்களை  அகற்ற வேண்டும், சாலையோரம் மின்விளக்குகள் அமைக்க வேண்டும் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com