இளையான்குடியில் மனிதநேய ஜனநாயகக் கட்சி சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் ஐபில் கிரிக்கெட் நடந்த விளையாட்டு மைதானம் அருகே போராட்டம் நடத்திய மனிதநேய ஜனநாயக் கட்சி பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி, நாம்தமிழர் கட்சித் தலைவர் சீமான் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இவர்களை விடுவிக்கக்கோரி அவர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தத் திருமண மண்டபத்தின் முன்பு போராட்டம் நடத்திய மனிதநேய ஜனநாயக் கட்சியின் மாநிலப் பொருளாளர் ஹாரூன்ரசீது, நடிகர் மன்சூர்அலிகான், கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர் உதயக்குமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது வழக்கு பதிந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். போலீசாரின் இந்த நடவடிக்கையைக் கண்டித்தும் வழக்கை ரத்து செய்து, அவர்களை விடுவிக்கக்கோரியும் இளையான்குடி பஸ் நிலையம் முன்பு திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மனிதநேய ஜனநாயகக் கட்சி இளையான்குடி நகர் செயலாளர் உமர் கத்தாப் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில வர்த்தகர் அணி துணைச் செயலாளர் சாகுல் ஹமீது சேட், மாவட்டச் செயலாளர் ஹாஜா முகைதீன் உள்ளிட்ட நிர்வாகிகள் பேசினர்.