காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக சமூகப்பணித் துறை சார்பில், பெண் மாற்றுத் திறனாளிகளின் நலம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கான உகந்த உத்திகள் பற்றிய கருத்தரங்கின் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவில், பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சொ. சுப்பையா தலைமை வகித்துப் பேசியது: கடந்த 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நாட்டின் 121 கோடி மக்கள் தொகையில் 2.68 கோடி பேர் மாற்றுத் திறனாளிகள் என தகவல் உள்ளது. குறைபாடுகள் உள்ளவர்களில் பெண்கள் எண்ணிக்கை கூடுதலாக உள்ளது. அவர்கள், சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்னைகள் ஆண் மாற்றுத் திறனாளிகளைக் காட்டிலும் அதிகம்.
எனவே, இக்கருத்தரங்கில் பங்கேற்கும் நிபுணர் குழுவினரின் விவாதமானது, மாற்றுத் திறனாளிப் பெண்களின் நலனை ஊக்குவிப்பதற்குரிய ஆலோசனைகளும், பரிந்துரைகளும் கொண்டதாக இருக்கவேண்டும். அதனை அரசுக்கு வழங்குவதன் மூலம் நல்லதொரு கொள்கை முடிவுகளை எடுப்பதற்கு உதவும்.
அழகப்பா பல்கலைக்கழகம் மாற்றுத் திறனாளிகளின் மேம்பாட்டுக்காக சிறப்பு கல்வியியல் மற்றும் புனர்வாழ்வு துறையை தொடங்கியது ஒரு முன்னோடிச் செயலா கும். இத்துறையுடன் இணைந்துள்ள சிறப்புப் பள்ளி, மாற்றுத் திறன் மாணவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது என்றார்.
இந்த விழாவில், தமிழ்நாடு மாநில மனநல ஒருங்கிணைப்பு அதிகாரி சி. ராமசுப்பிரமணியன் தொடக்க உரையாற்றினார். சென்னை பல்வகை மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய மேம்பாட்டு நிறுவனத்தைச் சேர்ந்த பி. கலைவாணி மற்றும் பெங்களூரு பல்கலைக்கழக வரலாற்றுத் துறை பேராசிரியர் ஜமுனா ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
முன்னதாக, சமூகப்பணித் துறை தலைவர் கேஆர். முருகன் வரவேற்றுப் பேசினார். இதில், 200-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள், தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள், மருத்துவ அதிகாரிகள், மருத்துவ உளவியலாளர்கள், சிறப்புக் கல்வி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.