சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் வெள்ளிக்கிழமை (ஏப். 20) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் க.லதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் மதுரையில் செயல்பட்டு வரும் சுந்தரம் பிரேக் லைனிங்ஸ் லிமிடெட் நிறுவனத்தினர் பங்கேற்று சுமார் 50-க்கும் மேற்பட்ட ஆண் பணியாளர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர்.
இந்த முகாமில் 10 ஆம் வகுப்பு, பிளஸ் 2, டிஎம்இ,டிஏ.இ,டி, இஇஇ, பி.ஏ. ,பிஎஸ்ஸி. பி.காம் ,உள்ளிட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்றோர் மற்றும் தேர்ச்சி பெறாதோர் கலந்து கொள்ளலாம். தகுதிகள் அடிப்படையில் விருப்பமுள்ள சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஆண்கள் மட்டும் தங்களது கல்விச் சான்றிதழ், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். இம்முகாமில் பணி வாய்ப்பு பெறுவோருக்கு பதிவு மூப்பு எந்த விதத்திலும் ரத்து செய்யப்பட மாட்டாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.