காளையார்கோவிலில் இருந்து கோடிக்கரைக்கு கூடுதல் பேருந்து இயக்கக் கோரிக்கை

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் இருந்து கோடிக்கரை கிராமத்துக்கு கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் என, அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் இருந்து கோடிக்கரை கிராமத்துக்கு கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் என, அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
     காளையார்கோவில் ஒன்றியம், இலந்தைக்கரை ஊராட்சிக்குள்பட்டது கோடிக்கரை கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கோடிக்கரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்கள் தங்களது அன்றாடப் பணிகளுக்காக காளையார்கோவில் அல்லது இளையான்குடிக்கு வந்து செல்கின்றனர். 
    எனவே, இப்பகுதியினருக்கு சிவகங்கை அரசுப் போக்குவரத்து கிளை பணிமனையிலிருந்து காளையார்கோவில், பாலையேந்தல், தவளிமண்டபம், இலந்தக்கரை, கிராம்புளி, பாண்டிமாரந்தை, தோண்டியூர், சோலமுடி உள்ளிட்ட கிராமங்கள் வழியாக கோடிக்கரைக்கு அதிகாலை 5.30 மணிக்கும், இரவு 9 மணிக்கும் என தினமும் இரு முறை அரசுப் பேருந்து  இயக்கப்படுகின்றன. 
    ஆனால், பேருந்து சேவை போதுமானதாக இல்லாததால், கோடிக்கரை, வடக்கு மராந்தை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமப் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் சுமார் 3 கி.மீ. தொலைவு நடந்தே சென்று வேளாரேந்தல் விலக்குப் பகுதியில் பேருந்தில் ஏறி காளையார்கோவில், இளையான்குடிக்கு சென்று வருகின்றனர். இதனால், அனைத்து தரப்பினரும் தினமும் அல்லல்படுகின்றனர். 
   இது குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் 3 முறை மனு அளித்தும், இதுவரை எந்தவித  நடவடிக்கையும் இல்லை என அக்கிராமத்தினர் கூறுகின்றனர்.      எனவே, கோடிக்கரை கிராமத்துக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com