சிவகங்கையில் வரும் ஆக.21ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் க.லதா சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகங்கை வருவாய் கோட்டத்திற்கு உள்பட்ட மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் வரும் ஆக.21-இல் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ள இந்த முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள நபர்களுக்கு தகுதியின் பொருட்டு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது.
மேலும்,மருத்துவ சிகிச்சையும், தேசிய அடையாள அட்டை பெற்ற மாற்றுத்திறனாளிகள் உதவி உபகரணங்கள்,மாத உதவித் தொகை,கல்வி உதவித் தொகை,வங்கிக் கடன் மற்றும் பிற அரசு உதவிகள் பெறுவதற்கு விண்ணப்பங்களும், ஆலோசனைகளும் வழங்கப்படும்.
ஆகவே, சிவகங்கை வருவாய் கோட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் இச்சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம் என அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.