சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நெடுமறம் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை இரவு கருவேல மரத்தில் சிக்கிய மலைப்பாம்பை கிராமத்தினர் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
நெடுமறம் கிராமத்தில் அவ்வப்போதுமலைப் பாம்புகளின் நடமாட்டம் தென்படுகிறது. சில மலைப்பாம்புகள் தீயணைப்புத் துறை மூலம் பிடிக்கப்பட்டு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு காட்டில் விடப்பட்டுள்ளன.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு அய்யனார் கோயில் அருகேயுள்ள குடியிருப்புப் பகுதிகளில் கோழிகளின் சத்தம் கேட்டு பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். சுமார் 12 நீளமும் 40 கிலோவிற்கும் மேற்பட்ட எடையும் கொண்ட ராட்சத மலைப்பாம்பு கோழியினைக் கவ்விக் கொண்டு
இருந்தது. பெண்கள் அக்கம் பக்கத்தில் உள்ள ஆள்களை கூப்பிடுவதற்குள் அடர்ந்த கருவேல மர புதருக்குள் பாம்பு சென்று மரத்தின் மேல் ஏறிக்கொண்டது. கிராமத்தினர் 2 மணி நேரம் போராடி பாம்பை பிடிக்க முயன்றனர். பின்னர் அப்பகுதிக்கு வந்த வருவாய் ஆய்வாளர் முத்துக்குமார் ஏற்கெனவே தீயணைப்புத் துறையில் வேலை பார்த்த அனுபவத்தை வைத்து லாவகமாக பாம்பினைப் பிடித்தார். பின்னர் சாக்குப் பையில் அடைக்கப்பட்டு திருப்பத்தூரில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. பிறகு மதகுபட்டி அருகில் உள்ள மண்மலைக்காட்டில் பாம்பை விடுவித்தனர்.