பருவமழை காலங்களில் பெய்யும் மழை நீரை சேமித்து அவற்றை உரிய முறையில் வேளாண் பணிக்கு விவசாயிகள் பயன்படுத்தும் வகையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து கண்மாய்களும் தூர்வாரப்படும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் க.லதா தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம்
ஆதனூர் ஊராட்சியில் பொதுப்பணித் துறையின் மூலம்
நடைபெற்று வரும் அந்த கிராமத்தில் உள்ள பெரிய கண்மாய் சீரமைப்புப் பணிகளை செவ்வாய்க்கிழமை பார்வையிட்ட சிவகங்கை மாவட்ட ஆட்சியர் க.லதா அப்பகுதி விவசாயிகளிடம் கூறியது:
உலக வங்கியின் நிதியை அடிப்படையாகக் கொண்டு ஆதனூர் பெரிய கண்மாயில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில், தற்போது
சீரமைக்கும் பணிகள்
நடைபெற்று வருகின்றன.
இப்பணியின் மூலம் கண்மாயின் 3,200 மீட்டர் நீளம் கரைப்பகுதி பலப்படுத்துவதுடன், பாசன வசதிக்காக ஏற்கெனவே
உள்ள இரண்டு மடைகள்
சீரமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. மேலும் கண்மாயின் உட்பகுதியில் உள்ள கருவேல மரங்களை முற்றிலுமாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக, மழைக் காலங்களில் போதிய அளவு தண்ணீர் தேக்கப்பட்டு சுமார் 1,500 ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும். இதேபோன்று பருவமழை காலங்களில் பெய்யும் மழை நீரை சேமித்து, அவற்றை உரிய முறையில் வேளாண் பணிக்கு விவசாயிகள் பயன்படுத்தும் வகையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து கண்மாய்களும் தூர்வாரப்படும் என்றார்.
ஆய்வின் போது பொதுப்பணித்துறை (சருகனியாறு) செயற்பொறியாளர் வெங்கட்ராமன், உதவி செயற் பொறியாளர் ரமேஷ், பொதுப்பணித் துறை அலுவலர் (கட்டடங்கள்) சுந்தரப்பன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.