சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த கடைகளை அதன் உரிமையாளர்கள் தாங்களாகவே அகற்றிக் கொண்டனர்.
இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் திருவிழா நடைபெறும். மேலும் வாரத்தில் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோயிலுக்கு பக்தர்கள் அதிகளவில் வருவார்கள். இக்கோயிலைச் சுற்றி ஏராளமானோர் கடைகள் அமைத்திருந்தனர். இந்நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து தாயமங்கலம் மாரியம்மன் கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த கடைகளை அகற்ற அறநிலையத்துறை நிர்வாகம் வியாபாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து தங்களது கடைகளை அகற்றக்கூடாது என வலியுறுத்தி வியாபாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் குறைதீர் கூட்டத்தில் மனுக் கொடுத்தனர். இந்நிலையில் புதன்கிழமை தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலைச்சுற்றி கடைகள் வைத்திருந்த வியாபாரிகள் தாங்களாகவே அவற்றை அகற்றிக் கொண்டனர்.