காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழக தமிழ்த்துறை சார்பில் உலகத்தாய்மொழி தின விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, துணைவேந்தர் சொ. சுப்பையா தலைமை வகித்துப் பேசும் போது, தாய்மொழி மீது பற்றுக்கொண்டவர் எல்லோரும் வாழ்வில் உயர்ந்திருக்கிறார்கள். அயலகத்தமிழர்கள் தமிழ்மொழி வளர்ச்சிக்காக பாடுபடுகின்றனர். இந்தியாவில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகளில் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய பழமையான மொழி தமிழ் என்றார். விழாவில், புதுக்கோட்டை கம்பன் கழகச் செயலர் ரா. சம்பத்குமார் சிறப்புரையாற்றி பேசியதாவது: தமிழின் தனித்தன்மை தாய்மொழி மாந்தருக்கு மட்டுமன்று விலங்குகளுக்கும் உண்டு.
தாய்மொழி என்பது தாய் 10 மாதம் கருவில் வளர்த்த காலத்தில் தாய் பேசிய மொழியைப் பேசக்கேட்டு குழந்தை பிறப்பதனால் மாந்தர் பேசுகின்ற மொழி தாய்மொழியாகும். தமிழ்மொழி பல்வேறு சிறப்புக்களையுடையது. பண்பாடு, நாகரிகம், வாழ்க்கை மற்றும் வீரம், பல்வேறு இலக்கியங்களை கொண்ட சிறப்பு தமிழ்மொழியில் உள்ளது என்றார்.
முன்னதாக தமிழ்த்துறைத்தலைவர் மு. பாண்டி வரவேற்றார். உதவிப் பேராசிரியர் மு. நடசேன் நன்றி கூறினார்.