சிவகங்கையில் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கத் துறை சார்பில் மதுவிலக்கு விழிப்புணர்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு தொடங்கிய இப்பேரணியை சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.ஜெயச்சந்திரன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். அப்போது , மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணைக் கண்காணிப்பாளர் இளங்கோ,காவல் ஆய்வாளர் குணமதி ஆகியோர் உடனிருந்தனர்.
இதில்,பள்ளி மாணவ,மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு மது அருந்தி வாகனம் ஓட்டாதீர், மதுப் பழக்கம் உடலுக்கு கேடு,மதுவைத் தவிர்ப்பீர் தலை நிமிர்ந்து வாழ்வீர், மது வீட்டுக்கு, நாட்டுக்கு, உடலுக்கு கேடு என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியும், அதுகுறித்த கோஷங்களை எழுப்பியும் ஊர்வலமாகச் சென்றனர்.
அரண்மனை வாசலில் தொடங்கிய பேரணி,தெற்கு ராஜ ரத வீதி, மரக்கடை, காந்தி வீதி, திருப்பத்தூர் சாலை வழியாக ராமச்சந்திரனார் பூங்காவில் நிறைவு பெற்றது. இதில், மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சுந்தரமாணிக்கம் உள்ளிட்ட ஏராளமான போலீஸார், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.