பிழையில்லா இலக்கியங்கள் படைப்பதற்கு இலக்கண ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பன்னாட்டுக் கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.
தேவகோட்டை அருகே சருகனியில் உள்ள இதயா மகளிர் கல்லூரியில் தமிழ் இலக்கியங்கள் சுட்டும் வாழ்வியல் அறம் என்னும் தலைப்பில் வியாழக்கிழமை பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஜோதி மேரி தலைமை வகித்தார். மலேசியத் தமிழ் இலக்கியக் கழகத்தின் துணைத் தலைவரும் முது பத்திரிக்கையாளருமான மா. கருப்பண்ணன் ஆய்வுக் கோவை வெளியிட்டு தொடக்க உரையாற்றினார்.
அவர் பேசுகையில், தமிழ் இலக்கியங்களை மென்மேலும் மக்களிடம் கொண்டு செல்வதற்கு இலக்கண ஆய்வுகளை ஆய்வாளர்கள் முன்னெடுக்க வேண்டும். ஆய்வினுடைய போக்கு என்பது தவறுகளைச் சுட்டிக்காட்டுவதல்ல.
பிழையில்லா இலக்கியங்கள் படைப்பதற்கு வழிவகை செய்யும் வகையில் அமையப்பெறுதல் வேண்டும். படைக்கப்பெறுகின்ற ஆய்வுக் கோவைகள் வெளியிட்ட கல்லூரியினுடைய இளங்கலை முதுகலை மாணவர்கள் ஒரு முறையாவது வாசிப்புச் செய்ய வேண்டும் என்றார். சேவுகன் அண்ணாமலை கல்லூரி பேராசிரியர் முருகன் சிறப்புரையாற்றினார்.
பேராசிரியர்கள் கிளாட்சன்,பூங்குழலி, மீன லோசினி, பாரதி ராணி உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். 50-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஆய்வு கட்டுரையை வெளியிட்டனர். கல்லூரி தமிழ்த்துறைத்தலைவர் வைரலெட்சுமி வரவேற்றார். பேராசிரியர் ஜோஸ்பின் அருள் ஜோதி நன்றி கூறினார்.