சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே அரசின் நீர்நிலை புறம்போக்கு நிலத்தை தனி நபருக்கு பட்டா வழங்கிய வட்டாட்சியர் மற்றும் நிலஅளவையரை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் க.லதா வெள்ளிக்கிழமை இடைநீக்கம் செய்தார்.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு மகேந்திரன் என்பவர் வட்டாட்சியராக பணியாற்றினார். இவர்,தற்போது சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆயத்தீர்வை துறையில் வட்டாட்சியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், மகேந்திரன் காளையார்கோவிலில் வட்டாட்சியராக பணியாற்றியபோது,அந்த பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான சுமார் 6 ஹெக்டர் நீர்நிலை நிலத்தை தனி நபருக்கு பட்டா வழங்கினராம். இதுகுறித்த புகாரின் பேரில் மாவட்ட ஆட்சியர் க.லதா விசாரணை செய்து வட்டாட்சியர் மகேந்திரன், அவருக்கு உதவியாக இருந்த நில அளவையர் ஜெயச்சங்கரன் ஆகிய இருவரையும் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.