சிவகங்கை மாவட்ட சமூக நலத்துறை சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் 1,286 பயனாளிகளுக்கு திருமண நிதி உதவி வழங்கப்பட்டது.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவுக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் க.லதா தலைமை வகித்தார். சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினர் பி.ஆர்.செந்தில்நாதன் முன்னிலை வகித்தார். இதில் கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் க.பாஸ்கரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
இதில், சமூகநலத் துறையின் சார்பில் மூவலூர் ராமாமிர்தம் நினைவு திருமண நிதியுதவி, டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண
நிதியுதவி, அன்னை தெரசா நினைவு
ஆதரவற்ற பெண்கள் திருமண நிதியுதவி, ஈ.வெ.ரா.மணியம்மையார் நினைவு ஏழை விதவை மகள் திருமண நிதியுதவி, டாக்டர். தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவி ஆகிய திட்டங்களின் கீழ் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்ற 705 பயனாளிகளுக்கு ரூ.50,000 வீதம் ரூ.3 கோடியே
52 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில்
திருமண நிதியுதவியும், 10 ஆம் வகுப்பு படித்த 581 பயனாளிகளுக்கு ரூ.25,000 வீதம் ரூ.1 கோடியே 45 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் திருமண நிதியுதவியும், அனைத்து பயனாளிகளுக்கும் 8 கிராம் வீதம் தாலிக்கு தங்கம் வழங்கிய வகையில் மொத்தம் ரூ.7 கோடியே 83 லட்சத்து 88 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
விழாவில், சிவகங்கை மாவட்ட வருவாய் அலுவலர் து.இளங்கோ, சமூக நலத் துறை அலுவலர் சகுந்தலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.