விவசாயிகள் பயன்பெறும் வகையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பாசனக் கண்மாய்கள் சீரமைக்கப்படும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் க.லதா தெரிவித்தார்.
தேவகோட்டை வட்டம், கோட்டூர் கிராம ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமுக்கு தலைமை வகித்து அவர் பேசியது:
மாவட்டத்தில் அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில், கூட்டுறவுத் துறை வங்கி மூலம் குறைந்த வட்டியில் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. மத்திய, மாநில அரசு திட்டங்கள் குறித்து மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் "ஸ்மார்ட் சிவகங்கா' எனும் செயலியில் பதிவேற்றும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.
கோட்டூர் ஊராட்சியில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் அடிப்படை கட்டமைப்புகளுடன் பாசனக் கண்மாய்கள் சீரமைக்கப்படும். இதேபோல், மாவட்டத்தின் பிற பகுதிகளில் உள்ள பாசனக் கண்மாய்களும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளுடன் சீரமைக்கப்படும் என்றார்.
அதைத் தொடர்ந்து, பல்வேறு துறைகள் மூலம் 256 பயனாளிகளுக்கு ரூ.3 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் க.லதா வழங்கினார்.
இம்முகாமில், சிவகங்கை மக்களவை உறுப்பினர் பி.ஆர்.செந்தில்நாதன், மாவட்ட வருவாய் அலுவலர் து.இளங்கோ, தேவகோட்டை சார் ஆட்சியர் ஆஷா அஜீத், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் வடிவேல், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் விஜயன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.