காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் இளைஞர் நலன் மற்றும் மேம்பாட்டு மையம், நுண்கலைத்துறை ஆகியவற்றின் சார்பில் தென்னிந்திய பல்கலைக் கழகங்களுக்கிடையிலான உருமி- 2018 எனும் நாட்டுப்புறக்கலை விழாவின் நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இவ்விழா சனிக்கிழமை அழகப்பா பல்கலைக் கழக லெ.சித.லெ. பழனியப்பச்செட்டியார் நினைவுக்கலையரங்கில் தொடங்கியது. இதில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 12 பல்கலைக் கழகங்களிலிருந்து சுமார் 250 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். நாட்டுப்புற கலைகளில் போட்டிகளும் நடைபெற்றன. இதனிடையே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிறைவு விழாவில் அழகப்பா பல்கலை. துணைவேந்தர் சொ.சுப்பையா தலைமை வகித்துப் பேசினார்.
விழாவில் திரைப்படம் மற்றும் நாட்டுப்புறப்பாடகர் டி.வேல்முருகன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நாட்டுப்புறக்கலைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். பல்கலைக் கழக பதிவாளர் குருமல்லேஷ்பிரபு, திட்டம் மற்றும் வளர்ச்சி அதிகாரி வி.பாலச்சந்திரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். நாட்டுப்புறக் கலைப் போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கேரள மாநிலம் கண்ணூர் பல்கலைக் கழகமும், இரண்டாமிடத்தை காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகமும் பெற்றன.
முன்னதாக விழா ஒருங்கிணைப்பாளர் பூ.தர்மலிங்கம் வரவேற்றார். விழா செயலர் எம். ஜோதிபாசு அறிக்கை வாசித்தார். உதவிப்பேராசிரியை கனகதாரா நன்றி கூறினார்.