சிவகங்கையில், தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணி சார்பில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தமாகா இளைஞரணியின் சிவகங்கை மாவட்டத் தலைவர் வி. சார்லஸ் ஜான்கென்னடி தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் தீனதயாளன், மாநில இணைச் செயலர் அன்பில் முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், சிவகங்கை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும், கடந்த ஆண்டு பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகளு,க்கு உரிய நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில், தமாகா சிவகங்கை மாவட்டத் தலைவர் கே.கே. பாலசுப்பிரமணியன், மாநில துணைத் தலைவர் கே.எம். மகாதேவன், மாநிலச் செயலர் ராஜலிங்கம் உள்பட அக்கட்சியினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.