தேவகோட்டையில் சம்பளம் தராத ஆத்திரத்தில் சனிக்கிழமை ஒரே நிறுவனத்தின் 2 ஆம்னி பேருந்துகளை தீவைத்து எரித்ததாக கிளீனரை போலீஸார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகேயுள்ள மூகண்டம்பள்ளி எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த முனுசாமி மகன் செந்தில்குமார் (52). இவர், தேவகோட்டையிலிருந்து சென்னைக்கு செல்லும் தனியார் ஆம்னி பேருந்தில் கிளீனராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், அவருக்கு கடந்த மாதம் சம்பளம் தரவில்லையாம். இதுகுறித்து, ஆம்னி பேருந்து நிர்வாகத்திடம் பலமுறை கேட்டும் உரிய பதிலளிக்கவில்லையாம்.
இதனால் ஆத்திரமடைந்த செந்தில்குமார் தேவகோட்டை அருகே கருத்தா ஊருணியில் உள்ள ஆம்னி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த ஆம்னி பேருந்தின் மீது டீசலை ஊற்றி தீ வைத்தாராம். பேருந்து முழுவதும் தீப் பற்றி எரிந்ததில் அருகே நின்று கொண்டிருந்த அதே நிறுவனத்தின் மற்றொரு ஆம்னி பேருந்தும் எரிந்து சேதமானது. இதுகுறித்த புகாரின் பேரில் தேவகோட்டை நகர் போலீஸார் வழக்குப் பதிந்து செந்தில்குமாரை சனிக்கிழமை மாலை கைது செய்தனர்.