சிவகங்கையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சிவகங்கை மாவட்டத் தலைவர் காந்திமதி தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் சண்முகப்பிரியா முன்னிலை வகித்தார்.
இதில், சிங்கம்புணரி அருகே செல்லியம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கைது செய்யப்பட்ட உதவி தலைமை ஆசிரியரை ஜாமீனில் விடுவித்ததைக் கண்டித்தும், ஜாமீனில் வெளிவந்த அவரை நெற்குப்பை அரசு பள்ளியில் சிறப்பாசிரியராக நியமித்ததைக் கண்டித்தும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும் முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் வாலன்டினா, மாநிலச் செயலர் சசிகலா, மாவட்ட துணைத் தலைவர் சாந்தி, மாவட்டத் துணைச் செயலர் மணியம்மா, மாவட்டப் பொருளாளர் பாக்கியலெட்சுமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.