சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே அணியவயல் கிராமத்தில் உள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தைல மரக்கன்றுகள் நடவு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தனிடம் மனு அளித்துள்ளனர்.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாமில் அவர்கள் அளித்துள்ள மனு விவரம்:
காளையார்கோவில் வட்டத்திற்குள்பட்ட அணியவயல் கிராமத்தில் சுமார் 300- க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் வசித்து வரும் பெரும்பாலானோருக்கு வேளாண் பணி, கால்நடை வளர்ப்பு மட்டுமே முதன்மைத் தொழிலாக உள்ளது.
இந்நிலையில் அணியவயல் கண்மாய் அருகே உள்ளஅரசு நிலத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அந்த நிலத்தில் பாதிக்கும் மேல் தைல மரக்கன்றுகளை நடவு செய்துள்ளனர். மீதமுள்ள நிலத்திலும் தற்போது தைல மரக்கன்றுகளை நடவு
செய்து வருகின்றனர்.
இதனால் எங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் நிலை உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. ஆகவே, இதனை கவனத்தில் கொண்டு வேளாண் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அணியவயல் கிராமத்தில் தைல மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிக்கு தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.