சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் வெள்ளிக்கிழமை நவராத்திரி விழாவை முன்னிட்டு திருவிளக்குப் பூஜை நடைபெற்றது.
இக்கோயிலில் நவராத்திரி விழா கடந்த 10 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் 3 ஆம் நாளான வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜையை முன்னிட்டு கணேஷ் குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜையில் ஈடுபட்டனர்.
மூலவர் சிவகாமி அம்மன், வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து விளக்கு பூஜை தொடங்கியது. இதில் கணபதி பூஜையுடன் தொடங்கி மலர்கள், குங்குமம் கொண்டு 108 அர்ச்சனைகளால் விளக்கிற்கு பூஜை செய்தனர்.
இவ்விழாவில் 300 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற பெண்கள் அனைவருக்கும் மங்கலப் பொருள்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை திருத்தளிநாதர் கோயில் பிரதோஷ குழுவினர் செய்திருந்தனர்.