தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 3 மாதத்திற்கு தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளது என சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் ஜே.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் புதிதாக நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை சனிக்கிழமை ஆய்வு செய்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது: சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ. 87 லட்சம் மதிப்பில் முதியோர்களுக்கான புதிய சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. மேலும் ரூ. 4.5 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் விபத்து சிகிச்சைப் பிரிவு விரைவில் செயல்பாட்டுக்கு வரும். வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ள நிலையில், தொற்று நோய்கள் பரவாமல் இருப்பதற்காக மாநிலம் முழுவதும் அனைத்து வகையான முன்னேற்பாடு பணிகளும் நடைபெற்று வருகிறது. அந்தந்த பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் நில வேம்பு கசாயம் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்த வரை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 3 மாதத்திற்கு தேவையான மருந்து பொருள்கள் கையிருப்பில் உள்ளது என்றார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன், மருத்துவக் கல்லூரி முதல்வர் வனிதா ஆகியோர் உடனிருந்தனர்.
காரைக்குடி: காரைக்குடி அருகே சங்கராபுரம் ஊராட்சியில் மர்மக்காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதிக்குச் சென்று ராதாகிருஷ்ணன் ஆய்வு நடத்தினார். பின்னர் காரைக்குடி பழைய அரசு மருத்துவமனையில் உள்ள வார்டுகளில் அவர் ஆய்வு செய்தார். அப்போது சுகாதாரத் துறை இணை இயக்குநர் விஜயன் மதமடக்கி, துணை இயக்குநர் யசோதாமணி உள்ளிட்ட மருத்துவர்கள், அரசு அலுவலர்கள் பலரும் உடனிருந்தனர்.