சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இருந்து கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் பக்தர்கள், திருப்பரங்குன்றம் திருக்கூடல்மலைக்கு சனிக்கிழமை பாதயாத்திரையாக புறப்பட்டுச் சென்றனர்.
மானாமதுரை பகுதியை பூர்வீகமாகக் கொண்டு வாழ்ந்து மறைந்த சித்தர் கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள். இவர் திருப்பரங்குன்றம் திருக்கூடல்மலையில் ராமலிங்கவிலாசம் என்னும் வழிபாட்டு தலத்தை அமைத்துள்ளார். ஆண்டுதோறும் இங்கு மாயாண்டி சுவாமிகள் குருபூஜை விழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு திருக்கூடல்மலை ராமலிங்கவிலாசத்தில் மாயாண்டி சுவாமிகள் குருபூஜை விழா ஞாயிற்றுக்கிழமை (அக்.14) நடைபெறுகிறது.
இவ்விழாவின்போது மாயாண்டி சுவாமிக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று, அதைத்தொடர்ந்து ஆன்மிக சொற்பொழிவு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்த விழாவில் பங்கேற்க மானாமதுரை பகுதியில் ஏராளமானோர் காப்புக்கட்டி விரதம் இருந்து வந்தனர். இவர்கள் தனித்தனிக் குழுக்களாக மானாமதுரையில் இருந்து திருக்கூடல் மலைக்கு பாதயாத்திரையாக புறப்பட்டுச் சென்றனர்.