சிவகங்கை மாவட்டத்தில் பட்டியலின மக்கள் வசித்து வரும் தொகுப்பு வீடுகள் சேதமடைந்துள்ளதால், புதிய தொகுப்பு வீடுகள் கட்டித்தர வேண்டும் என தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பினர் வலியுறுத்தினர்.
மானாமதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்புடைய தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில், சமூகநீதி மாவட்ட மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜ், துணைத்தலைவர் செல்லக்கண்ணு ஆகியோர் சிறப்புரையாற்றினர். இம் மாநாட்டில் புதிய மாவட்டத் தலைவராக கந்தசாமி, செயலாளராக பொன்னுச்சாமி, பொருளாளராக தங்கரஜ், துணைத் தலைவர்களாக தண்டியப்பன், வீரையா, ஜெயராமன் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.
மாநாட்டில், கச்சநத்தம் கிராமத்தில் நிகழ்ந்த கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்தோர் பட்டியலின மக்களை மிரட்டுகின்றனர். அவர்களை போலீஸார் கைது செய்ய வேண்டும். கச்சந்த்தம் கிராமத்தில் 24 மணிநேரமும் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் பட்டியலின மக்களின் தொகுப்பு வீடுகள் சேதமடைந்துள்ளதால், அவற்றை இடித்துவிட்டு, புதிய தொகுப்பு வீடுகள் கட்டித்தர வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.