சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அ.தி.மு.க.வின் 47 ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
திருப்பத்தூர் அண்ணாசிலை அருகே நடைபெற்ற இக்கூட்டத்திற்கு சிவகங்கை மக்களவை உறுப்பினர் செந்தில்நாதன் தலைமை வகித்தார். சிவகங்கை ராமநாதபுரம் மாவட்ட "ஆவின்' தலைவர் மு.அசோகன், ஒன்றியச் செயலாளர் ராமலிங்கம், துணைச் செயலாளர் முருகேசன், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் கரு.சிதம்பரம், ஜெ. பேரவை நிர்வாகி வெற்றிச் செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. அமைப்புச் செயலாளருமான ராஜகண்ணப்பன் பேசியதாவது: பாஜகவுடன் எங்களுக்கு ஒட்டும் கிடையாது, உறவும் கிடையாது. கூட்டணியும் கிடையாது. நாங்கள் பாஜகவை தூக்கிப் பிடிக்கவும் இல்லை. மேலும் காங்கிரஸ் கட்சிக்கு தொண்டர்கள் கிடையாது. பல்வேறு கட்சிகளுக்கு சென்றுவந்த திருநாவுக்கரசர் தலைமையேற்று இருக்கிறார். ஆனால் அந்த கட்சியில் 9 தலைவர்கள் உள்ளனர். அ.தி.மு.கவில் யாரும் தலைவர்கள் கிடையாது. நாங்கள் அனைவரும் தொண்டர்கள் தான். இந்த இயக்கத்தில் பல சங்கடங்கள் நடந்திருக்கலாம். அதிமுக ஆட்சியில் சில குறைகள் இருக்கலாம். சில அதிகாரிகள் செய்கின்ற தவறுகளால் ஆட்சிக்கு கெட்டபெயர் ஏற்படலாம். முதலமைச்சரை இன்றைக்கு சாதாரண தொண்டன் சந்திக்கிறான். இது தான் ஜனநாயக ஆட்சி என்றார்.
விழாவில் திரைப்பட நடிகர் சிங்கமுத்து, நெற்குப்பை முன்னாள் பேரூராட்சித் தலைவர் சஞ்சீவி, முன்னாள் நகரத் துணைச் செயலாளர் பிரேம்குமார், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். நகரச் செயலாளர் இப்ராகிம்ஷா நன்றி கூறினார்.